யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் மந்திரிமனை (சங்கிலிய மன்னனின் காலத்து மந்திரி மனையின் இடம்) தற்போது அழிவின் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாக்கவும், புனரமைக்கவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நல்லூர் மந்திரிமனை புனரமைப்பு தொடர்பாக தொல்லியல் திணைக்களமும் நம்பிக்கை பொறுப்பாளர்களும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறினார். இந்த புனரமைப்பு பணிகள் பொதுமக்களின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொல்லியல் திணைக்களத்திடம் போதிய நிதி இல்லாத காரணத்தால், மக்கள் பங்களிப்புடன் இந்த வரலாற்று இடத்தை பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப பணிகளை தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் நிலையில், தேவையான நிதி பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் திரட்டப்பட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நெதர்லாந்து நாட்டின் நிபுணர்கள் உதவியுடன் நல்லூர் மந்திரிமனை அமைந்திருந்த இடங்களில் ஸ்கேன் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த வரலாற்று இடத்தை எவ்வாறு புனரமைப்பது என்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளும் பெறப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை எனவும், முழுமையாக வரலாற்று பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை காப்பாற்ற பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக