பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற துயர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும், அவரின் புதிதாக பிறந்த பெண் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ஹசலக, மினிப்பே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய எச்.எம். ஸ்வர்ணமலா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த அவர், தனது மூன்றாவது குழந்தையைப் பிரசவிப்பதற்காக கடந்த மாதம் 25 ஆம் திகதி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அடுத்த நாள் முற்பகல் பெண் குழந்தை பிறந்திருந்தாலும், பிரசவத்திற்குப் பின்னர் தாயின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அவர் அவசரமாக பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 06 ஆம் திகதி அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டின்படி, குழந்தையின் வளர்ச்சி வழமையை விட அதிகமாக இருந்ததால் ஆரம்பத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. எனினும், மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சாதாரண பிரசவத்தை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த முயற்சி தோல்வியடைந்த பின்னரே அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இந்த தாமதமே குழந்தையின் உயிரிழப்புக்கும் பின்னர் தாயின் மரணத்திற்கும் காரணமாக அமைந்ததாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் விசாரணைகள் மற்றும் மேலதிக நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக