நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினச் சுமையை குறைக்கும் நோக்கில், லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தங்கள் ஜூன் 10 முதல் அமுலுக்கு வரவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விலைக் குறைப்பின் கீழ் பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டைப்பயறு, கடலை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கோதுமை மா உள்ளிட்ட பல முக்கிய உணவுப் பொருட்களுடன், சிவப்பு பச்சரிசி, சிவப்பு நாட்டரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாட்டரிசி மற்றும் பொன்னி சம்பா போன்ற அத்தியாவசிய அரிசி வகைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சவால்கள், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் உலக சந்தைகளில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களின் மத்தியில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு, குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், சந்தை விலைகளை கட்டுப்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக