இணையத்தளம் ஊடாக வருமானம் ஈட்டித்தருவதாக பொதுமக்களை நம்பவைத்து பணமோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் திணைக்களத்தின் சைபர் குற்றப்பிரிவின் வடமேல் மாகாண அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் கம்பஹா மாவட்டத்தின் உடுகம்பலை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது, பிரபலமான வர்த்தக நாமமொன்றை பயன்படுத்தி இணையத்தளம் வழியாக முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என பல்வேறு நபர்களை நம்பவைத்து பணம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் பலரிடமிருந்து பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகை தனிப்பட்ட தேவைகளுக்காக செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சுமார் நான்கு இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதால், பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இணைய வழி முதலீடுகள் மற்றும் வருமானத் திட்டங்களில் ஈடுபடுவதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், சந்தேகத்திற்கிடமான இணைய சேவைகள் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக