யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூன் மாதம் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் டெங்கு பரவல் அபாயம் அதிகமாகக் காணப்படும் கரவெட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கோப்பாய், சங்கானை, சாவகச்சேரி, நல்லூர், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, ஜூன் 09ஆம் திகதி பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்தி டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 10ஆம் திகதி அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதேவேளை, ஜூன் 11ஆம் திகதி பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், ஜூன் 12ஆம் திகதி வர்த்தக நிலையங்கள், சந்தைகள், மதஸ்தலங்கள் மற்றும் பொது அமைப்புகள் சுத்திகரிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.
டெங்கு நோயின் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதுடன், அனைவரும் தங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு அச்சுறுத்தலை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக