மலையகத்தின் கொட்டகலை ரொசிட்டா நகரில் சுமார் 8 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட பல்நோக்கு கட்டடத் திட்டம், 11 ஆண்டுகள் கடந்தும் முழுமையடையாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் பிரதேச சபை அலுவலகம், அரச அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் அமைக்கும் நோக்கம் இருந்தது. ஆனால், இரண்டு மாடிகள் மட்டுமே நிர்மாணிக்கப்பட்ட நிலையில் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்தக் கட்டிடம் பராமரிப்பின்றி புதர்கள் சூழ்ந்த நிலையில் காணப்படுவதுடன், பல ஆண்டுகளாக எந்தவொரு பயன்பாடுமின்றி கைவிடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளே பணிகள் நிறுத்தப்படுவதற்கான முக்கிய காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தெளிவான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கட்டடம் முழுமையடையாத காரணத்தால், கொட்டகலை பிரதேச சபை தற்போது கோயில் மண்டபத்தில் இயங்கி வருகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அரச சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வசதி மக்களுக்கு கிடைத்திருக்கும் என்பதோடு, வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்து பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களித்திருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் அரசியல் மாற்றங்களாலும் நிர்வாக குறைபாடுகளாலும் பாதிக்கப்படாமல் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பல ஆண்டுகளாக கைவிடப்பட்டுள்ள இந்தக் கட்டிடம், பொது நிதி பயன்பாடு, திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பல கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக