போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் சட்டவிரோத பணத்தை சட்டபூர்வமான வருமானமாக மாற்றியதாக சந்தேகிக்கப்படும் பாரிய பணச் சலவை வலையமைப்பு தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், கெஹெல்பத்தர பத்மே தனது போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலம் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை, கம்பஹா ஒஸ்மன் என்பவரிடம் ஒப்படைக்கும் முக்கிய பொறுப்பை இஷாரா செவ்வந்தி மேற்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
விசாரணை தகவல்களின்படி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பெருமளவிலான பணம் ஒஸ்மனிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், பின்னர் அந்தப் பணம் பல்வேறு வணிக நடவடிக்கைகள் மற்றும் முதலீடுகள் மூலம் சட்டபூர்வமான வருமானமாக மாற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளில் இஷாரா செவ்வந்தி பிரதான இணைப்பாளராக செயல்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். இதனுடன் தொடர்புடைய மேலும் பல நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, கம்பஹா ஒஸ்மனும் தடுப்புக் காவலில் உள்ளதுடன், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள், போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் பணச் சலவை நடவடிக்கைகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்தப் பண வலையமைப்பின் பின்னணியில் முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்படும் கெஹெல்பத்தர பத்மேவிடமும் விசாரணை நடத்த குற்றத்தடுப்புப் பிரிவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக