நாட்டில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் எதிர்நோக்கும் நிதிசார் சவால்கள் காரணமாக, அடுத்த மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வருடாந்திர பேருந்துக் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் சுமார் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் பல பேருந்து உரிமையாளர்கள் இழப்புகளை எதிர்கொண்டு வருவதுடன், சேவைகளை தொடர்வதும் சவாலாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையை சமாளிக்கும் வகையில் சில பகுதிகளில் பயணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், பாதிக்கப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கு அரசாங்கம் உரிய நிவாரணங்களை வழங்கத் தவறினால், வருடாந்திர கட்டண திருத்தத்தின் போது கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில் பேருந்துக் கட்டணங்கள் சுமார் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அதனால் குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 35 ரூபாவைத் தாண்டும் நிலை உருவாகலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பேருந்துச் சேவைகள் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைகளால் ஒருங்கிணைக்கப்படுவதால், தற்போதைய தேவைகள் மற்றும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பயண நேரங்களை மறுசீரமைக்குமாறு மாகாண அதிகாரசபைகளுக்கும் மாகாண சபைகளுக்கும் எழுத்து மூல அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், அன்றாடம் பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைச் செலவில் மேலும் அழுத்தம் ஏற்படக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக