உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவித காரணத்திற்காகவும் இடைநிறுத்தப்படக் கூடாது என இலங்கைக் கத்தோலிக்க திருச்சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி, தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் முயற்சிகள் தொடரப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கு தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் சுரேஷ் சலே தம்மை நேரில் சந்தித்ததாக கூறினார்.
அந்த சந்திப்பின் போது வழக்கை சமரசமாக முடிக்க முடியும் என சுரேஷ் சலே தெரிவித்ததாகவும், தனது அறிக்கைகளில் இருந்து அவரது பெயரை நீக்குமாறு கோரியதாகவும் அருட்தந்தை குறிப்பிட்டார். எனினும், தாம் வெளியிட்ட தகவல்கள் உண்மையின் அடிப்படையில் அமைந்தவை என்பதால் அவற்றை திருத்தவோ நீக்கவோ தேவையில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்ததாக அவர் கூறினார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஏதேனும் சதி அல்லது அரசியல் நோக்கம் இருந்ததா, அதற்குப் பின்னால் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பதை அறிந்து கொள்வது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உரிமை எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை மற்றும் அவருக்கு எதிராக நடைபெறும் விசாரணைகள் ஒரு தனிப்பட்ட சட்ட விடயம் என்றும், அவதூறு வழக்கு முற்றிலும் வேறுபட்ட சட்ட நடைமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தில் எந்த அரசியல் தலையீடும் இன்றி, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், உண்மையை கண்டறியும் முயற்சிகள் தடையின்றி தொடர வேண்டும் எனவும் அருட்தந்தை சிறில் காமினி வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக