ஜப்பானிலிருந்து வருகை தந்த பௌத்த பக்தர்கள் குழுவொன்று, மூன்று மாத காலம் கடுமையான விரதம் இருந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம புனித பூமியை வந்தடைந்துள்ளது. இந்த நிகழ்வு, மத எல்லைகளை தாண்டிய ஆன்மீக நம்பிக்கையும் பக்தி உணர்வும் உலகளவில் எவ்வாறு மக்களை இணைக்கின்றன என்பதற்கான சிறப்பான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
ஒன்பது பேரைக் கொண்ட இந்த ஜப்பானிய பக்தர்கள் குழுவினர், மாமிச உணவுகளை முழுமையாக தவிர்த்து ஆன்மீக ஒழுக்கத்துடன் விரதம் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் கதிர்காமத்தில் தங்கியிருந்து, அங்குள்ள மக்களுக்குத் தான தர்மங்கள் வழங்கியதுடன், கதிர்காமக் கந்த பெருமானுக்காக விசேட பூஜைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
கதிர்காமக் கடவுளுக்காக தொடர்ந்து மூன்று நாட்கள் பூஜைகள் நடத்தியுள்ள இந்த பக்தர்கள் குழுவின் ஆன்மீக ஈடுபாடு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறிப்பாக, குழுவில் இருந்த ஜப்பானிய பெண் பக்தர் ஒருவர், தாம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முதலாக கதிர்காமம் வந்ததாகவும், அன்றிலிருந்து கதிர்காமக் கந்த பெருமானுடன் தனிப்பட்ட ஆன்மீக பிணைப்பு உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மொழி, நாடு, கலாசாரம் ஆகிய எல்லைகளை தாண்டி உருவாகியுள்ள இந்த பக்தி உறவு, கதிர்காமத்தின் சர்வதேச ஆன்மீக முக்கியத்துவத்தை மீண்டும் வெளிப்படுத்துகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக