கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இச்சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். கூட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து ஏற்கனவே கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று விஜய்யிடம் விசாரணை நடைபெறுகிறது.
இன்று அதிகாலை 7 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், சுமார் 11 மணியளவில் சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றார்.
விஜய்க்கு ஏற்கெனவே 'Y' பிரிவு பாதுகாப்பு உள்ள நிலையில், டெல்லி பொலிஸார் கூடுதல் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். சிபிஐ அலுவலகத்தைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்?, அனுமதிக்கப்பட்டதை விடக் கூடுதல் மக்கள் கூடியது எப்படி?, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் என்ன? போன்ற பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்கவுள்ளதாகத் தெரிகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக