சென்னையின் கோயம்பேடு பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவத்தில், இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளம்பெண் யான்சி உயிரிழந்த வழக்கில் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயது சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி, சமூக ஊடகத்தின் மூலம் சென்னை சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், நண்பரை சந்திக்க சென்னை சென்ற அவர், கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறுக்குப் பின்னர் வெளியேறியுள்ளார்.
அதன் பின்னர், மோட்டார் சைக்கிளில் சென்ற யான்சி மற்றும் அவருடன் இருந்த சிறுமி மீது மற்றொரு தரப்பினர் காரை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலேயே யான்சி உயிரிழந்த நிலையில், காயமடைந்த சிறுமி பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரில் அரசியல் கட்சி கொடி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய கேளிக்கை விடுதி அதிகாரிகளால் மூடப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக