பெண்களுக்கான சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அரச மற்றும் தனியார் துறைகளில் அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைக்க தீர்மானித்துள்ளது. சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு முன்வைக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, பெண்களின் உடல்நலம் மற்றும் பணியிட நலன்களை முன்னிறுத்தும் முக்கிய சமூக மாற்றமாக பார்க்கப்படுகிறது.
குடும்ப திட்டமிடல் சங்கத்தின் தகவலின்படி, தங்களது பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை வழங்கும் நடைமுறை ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், இதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, தொழில் அமைச்சு உள்ளிட்ட தொடர்புடைய தரப்புகளுக்கு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடல் மற்றும் மனநல சவால்களை கருத்தில் கொண்டு, இந்த நடைமுறை பெண்களுக்கு ஏற்ற பணியிட சூழலை உருவாக்கும் என்பதுடன், மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான சமூக விழிப்புணர்வையும் மேம்படுத்தும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உலகின் பல நாடுகளில் மாதவிடாய் சுகாதார உரிமைகள் தொடர்பில் முன்னேற்றமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையிலும் இந்த விடயத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக