இலங்கை மத்திய வங்கி நேற்று அறிவித்த 100 அடிப்படை புள்ளிகள் (1%) கொள்கை வட்டி வீத அதிகரிப்பு என்பது, மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்படும் நாட்டின் மிக முக்கிய அடிப்படை வட்டி விகிதமாகும் (Policy Interest Rate).
இந்த வட்டி வீதம் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் கடன் வட்டி அல்ல என்றபோதிலும், வணிக வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து பணத்தைப் பெறும்போது அல்லது வைப்புச் செய்யும்போது இந்த அடிப்படை வட்டியே முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த வங்கித்துறையின் வட்டி விகிதங்களும் மாற்றமடையும்.
வட்டி வீதம் ஒரு சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தனிநபர், வீட்டு மற்றும் வாகனக் கடன்களுக்கான (Leasing & Loans) வட்டி வீதங்கள் உடனடியாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கடன் சுமை: உதாரணமாக, முன்னர் 12 சதவீதமாக இருந்த ஒரு கடனுக்கான வட்டி வீதம், தற்போது 13 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக மாறுவதால் பொதுமக்கள் மற்றும் வணிகங்களின் மாதாந்திரக் கடன் தவணைச் சுமை (EMI) அதிகரிக்கும்.
மந்தமடையும் சந்தை: வட்டி உயர்வால் கடன் பெறுவது கடினமாகவும் செலவுமிக்கதாகவும் மாறுவதால், மக்களின் செலவீனங்கள் குறையும். இதனால் புதிய தொழில்களைத் தொடங்குதல், வாகனங்கள் வாங்குதல், வீடு கட்டுதல் மற்றும் சொகுசு நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்தல் போன்ற பொருளாதார நடவடிக்கைகள் சந்தையில் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.
மத்திய வங்கியின் இந்த அதிரடி நாணயக் கொள்கை மாற்றமானது குறுகிய காலப் பாதகங்களைக் கொண்டிருந்தாலும், நீண்ட காலப் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கமாகக் கொண்டது.
மத்திய வங்கியின் முதன்மை நோக்கம்:
சந்தையில் பணப் புழக்கம் அதிகமாக இருந்தால் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து பணவீக்கம் கட்டுப்பாடின்றிச் செல்லும். எனவே, நுகர்வைக் குறைத்து சந்தையில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே இந்த வட்டி வீத உயர்வின் முதன்மை நோக்கமாகும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக