புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை யாழ் சிறைச்சாலையில் கைதி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் பூபாலசிங்கம் ஜெயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர், நாட்டையே உலுக்கிய வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருந்தார். மேலும், இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வாசிக்கப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்பாகவே அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாண மக்களிடையே மீண்டும் வித்யா வழக்கை பற்றிய கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக