ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிக்கோயா பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வசித்து வந்த 85 வயதுடைய எஸ்.காளிமுத்து சத்திவேல் மற்றும் அவரது 82 வயது மனைவி சகுந்தலாதேவி ஆகியோர் கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், வர்த்தக நிலையத்திற்கு அருகிலிருந்த சிசிடிவி கமரா காட்சிகள் முக்கிய ஆதாரமாக அமைந்தன. அதன் அடிப்படையில், பொகவந்தலாவை - பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்து இருந்த சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
பதுளை - ஹாலிஎல - தெமோதறை பகுதியைச் சேர்ந்த இந்த நபர், கொழும்பில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் பெண்ணொருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தபோதே பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சந்தேகநபரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரும்புக் கம்பி, கூரிய ஆயுதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக