இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி மற்றும் இலங்கை ரூபாயின் மிகவேகமான பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றினால் நாடு மீண்டும் ஒருமுறை கடுமையான பொருளாதார எச்சரிக்கை நிலையை எதிர்கொண்டுள்ளதாகப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையைக் கருத்திற்கொண்டு, உடனடியாகச் சர்வ கட்சி மாநாடு (All Party Conference) ஒன்றைக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள இந்த ஆபத்தான சூழலில், தங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூபாயின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையாகப் பார்க்க முடியாது என்றும், நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னர் தேசிய அளவிலான அவசர தீர்வுகளைக் கண்டறிய வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாணய மாற்றுச் சந்தையின் தற்போதைய ஸ்திரமற்ற நிலை குறித்து எச்சரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சந்தையில் நம்பிக்கை நலிவடைந்துள்ளமை காரணமாக பெரும் நிச்சயமற்ற ஒரு "நச்சுச் சுழற்சி" உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
டொலரின் மதிப்பு மேலும் உயரும் என்ற அச்சத்தில் இறக்குமதியாளர்கள் முன்கூட்டியே டொலர்களைக் கொள்வனவு செய்ய முண்டியடிப்பதும், ஏற்றுமதியாளர்கள் தங்களது வெளிநாட்டு நாணயங்களைச் சந்தைக்குக் கொண்டு வராமல் முடக்கி வைப்பதும் சந்தையை மேலும் முடக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் பொருளாதார மற்றும் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், அரச தரப்பிலுள்ள மிக முக்கியமான நபரொருவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக