யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் தொடர்பான விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையில் ஏற்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், குறித்த பண்பாட்டு மையத்தை யாழ்ப்பாண மாநகர சபையிடம் நேரடியாக கையளிக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவையும் சந்தித்து, யாழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் கவலைகள் குறித்து எடுத்துரைத்ததாகவும் கூறினார்.
பூர்த்தி செய்யப்பட்டுள்ள திருவள்ளுவர் பண்பாட்டு மையம் யாழ் மாநகர சபைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே தங்களது பிரதான கோரிக்கையென அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கட்டிடத்தின் பயன்பாடு, நிர்வாகம் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் உள்ளூர் மட்டத்தில் தனியான ஆலோசனைக் குழு அமைக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
யாழ் மாநகர சபைக்கு நிர்வாக சவால்கள் இருப்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டிட உரிமை மாநகர சபையிடமே இருக்க வேண்டும் என சி.வீ.கே வலியுறுத்தினார். மேலும், அரசாங்கம் தற்போது எடுத்துள்ள கூட்டு முகாமைத்துவ தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனுடன், அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரை சந்தித்து மேலதிக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த திருவள்ளுவர் பண்பாட்டு மையம், வட மாகாண மக்களின் பண்பாட்டு மற்றும் கலை வளர்ச்சிக்கான முக்கிய மையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக