பொலன்னறுவை மாகாண வருமான வரி மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொழிலாளி ஒருவர், காணி மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்து தருவதாக கூறி 35,000 ரூபா இலஞ்சம் பெற்றபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அரச காணியை உறுதிப்பத்திரம் மூலம் மாற்றும்போது, அதன் பெறுமதியை குறைத்து காட்டி அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரை வரியை குறைத்துத் தருவதாக சந்தேகநபர் உறுதியளித்திருந்தார்.
இதற்காக ஆரம்பத்தில் 50,000 ரூபா கோரப்பட்ட நிலையில், பின்னர் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டின் பேரில் தொகை 35,000 ரூபாவாக குறைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று காலை அலுவலக வளாகத்திலேயே இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட தருணத்தில் அதிகாரிகள் சுற்றிவளைத்து சந்தேகநபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் எதிரிவீர ஆருகட்டு படபெந்திகே சுமித் இந்திக குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேகநபர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக