முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்று (12) முற்பகல் 9.00 மணிக்கு முன்னிலையாகவுள்ளார். ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான மறைந்த கபில சந்திரசேன வழங்கியதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய வாக்குமூலம் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கபில சந்திரசேன உயிருடன் இருந்தபோது, அந்த வாக்குமூலம் வற்புறுத்தலின் பேரிலேயே பெறப்பட்டது என நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்திருந்ததை மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய "சட்டவிரோத" வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டால், அதற்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். "முன்னாள் ஜனாதிபதி கேள்விகளுக்குப் பயந்து ஓடுபவர் அல்ல" என்று குறிப்பிட்டுள்ள அவர், சட்ட ரீதியான விடயங்களை ஆராய்ந்த பின்னரே அவர் ஆணைக்குழுவிற்குச் செல்வதாக உறுதிப்படுத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் சட்டத்தரணிகள் குழு இந்த விசாரணையின் சட்டத்தன்மை குறித்து ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பவும் திட்டமிட்டுள்ளது. அண்மையில் சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமான கபில சந்திரசேனவின் வாக்குமூலம் இப்போது மீண்டும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக