தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமான முறையில் 'குஷ்' ரக போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வர முயன்ற ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒரு தனியார் நிறுவனத்தின் நிதி முகாமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (மே 08) இரவு 10.15 மணியளவில் பேங்கொக் நகரில் இருந்து 'தாய் எயார் ஏசியா' விமானம் மூலம் இவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தின் 'கிரீன் சேனல்' (Green Channel) வழியாகச் சோதனையின்றி வெளியேற முயன்றபோது, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இவரது கைப்பையைச் சோதனையிட்டனர். அந்தப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 512 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தைப் பெறுமதி சுமார் 51 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. உயர் பதவியில் இருக்கும் ஒருவரே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் உள்ள சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சுங்கப் பிரிவினரின் கண்காணிப்பு தற்போது விமான நிலையத்தில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகள்
இலட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்: கட்டுநாயக்கவில் தனியார் நிறுவன நிதி முகாமையாளர் கைது!
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக