ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எயார்பஸ் கொள்வனவில் 2 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இவர், அண்மையில் பிணையில் விடுதலையான நிலையில், போலிப் பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாகப் புதிய சர்ச்சை எழுந்தது. இதனால் அவரை மீண்டும் கைது செய்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கறிஞர்கள் மூலம் சரணடையத் திட்டமிட்டிருந்தார். எனினும், சரணடைவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகத் தனது அறையில் பயணப் பையின் பட்டியைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு முதல் நாள் இரவு பல மணிநேரம் தனது சட்டப் போராட்டங்கள் குறித்து வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இவர் அரவிந்த டி சில்வாவின் மனைவியின் சகோதரியைத் திருமணம் செய்தவர் என்பதால், அந்த இல்லத்திலேயே தங்கியிருந்துள்ளார். இந்த மரணத்தில் ஏதேனும் மர்மம் உள்ளதா என்பதை அறியப் பொலிஸார் அவரது கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசியைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மிஹின் லங்கா போன்ற முக்கிய நிறுவனங்களில் உயர்மட்டப் பதவிகளை வகித்த இவரது முடிவு அரசியல் மட்டத்தில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. நீதிமன்றத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டு மற்றும் கைது குறித்த அச்சமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகள்
நீதிமன்றத்தில் சரணடைய இருந்த நிலையில் கபில சந்திரசேன தற்கொலை: கொழும்பில் பெரும் பரபரப்பு!
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக