பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த நதீஷானி தரங்கிக அமரநாயக்க (42) என்ற ஆசிரியை உயிரிழந்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிணக்கு காரணமாக இவர் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 29-ஆம் திகதி இடம்பெற்ற தோழி ஒருவரின் திருமண நிகழ்வில் கணவர் கலந்துகொள்ளாதது மற்றும் 30-ஆம் திகதி கணவர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டது தொடர்பாக இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என ஆசிரியை பலமுறை வற்புறுத்தியும், கணவர் அதனைப் புறக்கணித்துச் சென்றதால் கடும் ஆத்திரமடைந்த ஆசிரியை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன்போது அவரைத் தடுப்பதற்காக மகனும், தாயாரும் பின்தொடர்ந்த போதிலும், அவர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறிச் சென்றுள்ளார். இது தொடர்பாக நள்ளிரவு 12.40 மணியளவில் மொரகஹேன பொலிஸில் கணவர் முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையில், மே 1-ஆம் திகதி களுத்துறை தெற்கு கடற்கரையில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. கணவர் மற்றும் தாயார் மூலம் மேற்கொள்ளப்பட்ட அடையாளப்படுத்தலில், இது காணாமல் போன ஆசிரியையே என்பது உறுதி செய்யப்பட்டது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக