இலங்கையில் 2026-ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகத் தேசிய முறைமை செயல்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்தது. உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் இதற்குக் காரணமாகக் கூறப்படும் நிலையில், மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் உயர்த்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள் இன்று (ஏப்ரல் 29) வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆர்வமுள்ள தரப்பினர் மே மாதம் 06-ஆம் திகதி வரை தமது எழுத்துமூலக் கருத்துக்களைச் சமர்ப்பிக்க முடியும். மேலும், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வாய்மூலக் கருத்துத் தெரிவிப்பதற்கான விசேட அமர்வும் நடைபெறவுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர், மின்சாரக் கட்டண உயர்வா அல்லது தற்போதைய நிலையே நீடிக்குமா என்பது குறித்த இறுதித் தீர்மானம் 2026 மே மாதம் 09-ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக