இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா (Air India), இண்டிகோ (IndiGo) மற்றும் ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIA), நாட்டின் வானூர்தித் துறை சந்தித்து வரும் பாரிய நிதிச் சிக்கல் குறித்து மத்திய அரசுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன. இது விமான எரிபொருள் செலவை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.
உலகின் ஐந்தாவது பெரிய வான்வழிப் போக்குவரத்துச் சந்தையான இந்தியாவில், சர்வதேச வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட தூரப் பயணங்களுக்கான இயக்கச் செலவு (Operating Cost) பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளன. இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால், விமான எரிபொருள் (ATF) மீதான வரிகளைக் குறைத்து, விலையை உடனடியாகக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என FIA கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், பல விமான சேவைகள் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக