ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (09.04.2026) இரவு தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விருந்துபசாரத்தின் போது மாணவர்களுக்கிடையே திடீரென ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இந்த மோதலில் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவன் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஹோட்டல் நிர்வாகம் வழங்கிய தகவலின் அடிப்படையில் மொரகஹஹேன மற்றும் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது, தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதே தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவனின் சடலம் மீதான மரண பரிசோதனைகள் மற்றும் மேஜிஸ்திரேட் விசாரணை இன்று (10.04.2026) நடத்தப்படவுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒன்று கூடிய இடத்தில் சக மாணவர்களே ஒருவரைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக