அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் செமிகண்டக்டர் (Semiconductor) துறையில் உதவி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வந்த டன்ஹாவ் வாங் (Danhao Wang), கடந்த மார்ச் 19 ஆம் திகதி பல்கலைக்கழகக் கட்டடத்திலிருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் சந்தேகிக்கும் நிலையில், இதற்குப் பின்னணியில் அமெரிக்கச் சட்ட அமுலாக்கத் துறையினரின் (FBI உள்ளிட்ட அதிகாரிகள்) முறையற்ற விசாரணை இருப்பதாகச் சீனத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. உயிரிழப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாகவே அதிகாரிகள் அவரிடம் கடுமையான முறையில் விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, தேசியப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் திருட்டு போன்ற காரணங்களைக் காட்டி சீன மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மீதான கண்காணிப்பைக் கடுமையாக்கியுள்ளது. குறிப்பாக, இராணுவத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் சீன ஆய்வாளர்களின் விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், வாங்-கின் மரணம் இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விப் பரிமாற்றத்தைச் சீர்குலைப்பதாகச் சீன வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது. கடந்த 2024 இல் விஞ்ஞானி ஜேன் வூ தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, தற்போது நிகழ்ந்துள்ள இந்த மரணம் அமெரிக்காவில் உள்ள சீனக் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக