மொனராகலை மாவட்டம், புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் வதிகே தசுன் மதுஷான் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு, அதன் பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தவர் என்பதும், மேலதிகக் கல்விக்காகத் தனியார் வகுப்புக்களுக்குச் சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, குறித்த மாணவன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகக் காதலி பிரிந்து சென்றதால், கடந்த சில நாட்களாக மதுஷான் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்த மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மாணவனின் சடலம் மரணப் பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், புத்தல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த மாரசிங்க தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக