ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நேட்டோ (NATO) பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோருக்கு இடையில் வொஷிங்டனில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய நேட்டோ உறுப்பு நாடுகள் அடுத்த சில நாட்களில் தங்களின் உறுதியான இராணுவப் பங்களிப்பை வழங்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தினார். ஈரானுடனான இந்த நெருக்கடி நிலையில் அமெரிக்காவிற்குப் போதுமான ஆதரவை வழங்காத நேட்டோவை ஒரு "காகிதப் புலி" (Paper Tiger) எனச் சாடிய ட்ரம்ப், நேட்டோ நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்பை மட்டும் நம்பியிருப்பதாகவும், ஆனால் இக்கட்டான சூழலில் உதவ முன்வருவதில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அதிருப்தி காரணமாக நேட்டோ கூட்டணியிலிருந்து அமெரிக்கா வெளியேறக்கூடும் என ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தல் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப் பிரித்தானியா தலைமையில் 40 நாடுகள் கொண்ட குழு திட்டங்களை வகுத்து வருகிறது. எனினும், நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களிடம் "சுங்கக் கட்டணம்" (Toll) வசூலிக்க வேண்டும் என்ற ஈரானின் நிபந்தனையைப் பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. அமெரிக்கா - ஈரான் இடையே ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பது சவாலானது எனத் தெரிவதால், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் தொடர்ந்தும் சிக்கல் நீடிக்கிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக