டெல்லியில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், 211 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது. கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது, 5-வது பந்தில் சிங்கிள் ஓட மறுத்த டேவிட் மில்லரின் முடிவு தற்போது விவாதப்பொருளாகியுள்ளது. அந்தப் பந்தில் ரன் எடுக்காத மில்லர், கடைசி பந்தில் பிரசித் கிருஷ்ணாவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் போனார். இதனால் டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தத் தோல்விக்கு மில்லரே காரணம் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "தன்னால் வெற்றி ரன்னை அடிக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் மில்லர் எடுத்த முடிவை நாம் குறை கூற முடியாது; பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த கடைசி பந்து மிகச் சிறப்பாக அமைந்ததே தோல்விக்குக் காரணம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனும், "குல்தீப் யாதவ் கடைசி பந்தை எதிர்கொண்டு அவுட் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கமே மில்லரிடம் இருந்திருக்கும்; அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு வந்த அவரை ஒரு முடிவிற்காகக் குறை சொல்லக் கூடாது" எனத் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக