பிரித்தானியாவில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த சுகீர்தன் தங்கராசா (38 வயது) எனும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞருக்கு, போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றம் 16 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் திகதி, கிங்ஸ்டன் மயானப் பகுதியில் சிறுவன் ஒருவனை நோக்கி ஆபாசமான மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிரட்டிய சம்பவம் தொடர்பாக அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தான் தங்கியிருந்த விடுதியில் 25 வயது இளைஞர் ஒருவரைத் தாக்கியதுடன், அங்கிருந்தவர்கள் முன்னிலையில் அநாகரீகமான முறையில் தனது உடலை வெளிப்படுத்திப் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பரிசீலித்த நீதிமன்றம் அவருக்கு இந்தச் சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. சுகீர்தன் தங்கராசா இலங்கையைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது சிறைத்தண்டனை காலம் முடிவடைந்ததும் அவரை இலங்கைக்கு நாடுகடத்துவது (Deportation) குறித்துப் பிரித்தானிய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துகொள்வது மற்றும் குழந்தைகளை அச்சுறுத்துவது போன்ற செயல்கள் மிகக் கடுமையான குற்றங்களாகக் கருதப்படும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக