லிபியா, எகிப்து மற்றும் கிரீஸின் கிரேட் தீவு உள்ளிட்ட பகுதிகளில் வானம் திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக நீலமாக அல்லது மழைக்காலங்களில் கருமையாக காணப்படும் வானம் இவ்வாறு சிவப்பாக மாறியதால், பலர் இதை அரிதான நிகழ்வு அல்லது உலக அழிவிற்கான அறிகுறி என கருதி அச்சம் தெரிவித்தனர்.
ஆனால், அறிவியலாளர்கள் இதற்கு முழுமையான இயற்கை காரணம் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளனர். ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புழுதிப்புயல் காரணமாக, மிகப்பெரிய அளவில் தூசி துகள்கள் காற்றின் மூலம் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பரவி, இந்த நாடுகளின் மேல் பரவியுள்ளன. அந்த தூசிகளில் இரும்பு ஆக்ஸைடு (Iron Oxide) அதிகமாக இருப்பதால், அது குறைந்த அலைநீளமான நீல ஒளியை சிதறடித்து, நீண்ட அலைநீளமான சிவப்பு ஒளியை மட்டும் அதிகமாக காட்டுகிறது. இதுவே வானம் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் தோன்ற காரணமாகும்.
மேலும், இந்த தூசி பரவல் காரணமாக காற்றின் தரமும் பாதிக்கப்பட்டதுடன், பார்வை தெளிவும் குறைந்து, குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கு சிரமமான சூழ்நிலை உருவானது. இதேபோன்ற நிகழ்வு கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிலும் பதிவாகியுள்ளது. அங்கு ஏற்பட்ட புயல் வறண்ட பகுதிகளில் உள்ள தூசியை மேலே தூக்கி, வானத்தை சிவப்பு நிறமாக மாற்றியுள்ளது.
இதனால், இந்த நிகழ்வு அச்சப்பட வேண்டிய ஒன்றல்ல; மாறாக, இயற்கையின் வானிலை மாற்றங்களால் ஏற்படும் ஒரு விஞ்ஞான ரீதியான நிகழ்வு என நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக