கேகாலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஹேன பிரதேசத்தில் கடந்த 28-ஆம் திகதி பாரிய தேடுதல் வேட்டையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கொழும்பு – கண்டி பிரதான வீதியை நோக்கியுள்ள காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக லொறி ஒன்றை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த லொறியின் பின்புறத்தில் எரிபொருள் விநியோகத்தை எளிதாக்கும் வகையில் மீற்றருடன் கூடிய நவீன இறைக்கும் இயந்திரம் (Pumping Machine) பொருத்தப்பட்டு, சட்டவிரோத எரிபொருள் நிலையமாகச் செயற்பட்டு வந்தமை அம்பலமானது.
இந்த முற்றுகையின் போது லொறியில் இருந்த டீசல் தொட்டியிலிருந்து 1,235 லீட்டர் டீசல், இறைக்கும் இயந்திரம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாகத் தோலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வரக்காபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதா என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக