அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26.03.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய அரிசித் தட்டுப்பாடு குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி விளக்கமளித்தார். குறிப்பாக கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி வகைகள் சந்தையில் கட்டுப்பாட்டு விலையைத் தாண்டி விற்பனை செய்யப்படுவதுடன், சில இடங்களில் கறுப்புச் சந்தை விலையில் கூட அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாத பாரதூரமான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் அரிசி அறுவடைக்காலம் ஆரம்பமாகியுள்ள போதிலும், சந்தையில் நிலவும் இந்தச் செயற்கைத் தட்டுப்பாடு கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து தேசிய உணவுப் பாதுகாப்புக் குழு ஏற்கனவே விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது. நுகர்வோரைப் பாதிக்கும் வகையிலான இந்த விலையேற்றத்தையும் தட்டுப்பாட்டையும் கட்டுப்படுத்தத் தவறினால், சந்தையில் அரிசி விநியோகத்தை சீர்படுத்தவும் விலையைக் குறைக்கவும் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கறுப்புச் சந்தை விற்பனையைத் தவிர்க்காவிட்டால், அரசாங்கம் இந்த அதிரடி முடிவை எடுக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக