மட்டக்களப்பில் பெண்களை ஏமாற்றி கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைகளில் தெரியவந்ததாவது, சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் மாதாந்த தவணை முறையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அந்த வாகனங்களுக்கான முற்பணம், திருடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்து செலுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுமார் 19 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், அவை சுமார் 50 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நகைகள் அடகு வைக்கப்பட்டு பின்னர் மீட்டெடுத்து விற்பனை செய்யப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த தகவல்களின் அடிப்படையில், இரண்டு நகையக உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து உயிருடன் ஒரு யுவதி மீட்கப்பட்டதன் பின்னரே ஆகும். அதே இடத்தில் உருக்குலைந்த நிலையில் மற்றொரு பெண்ணின் உடலும் மீட்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இதுவரை 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 03 பிரதான சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 நகையக உரிமையாளர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக