பங்களாதேஸில் போக்குவரத்துப் படகில் ஏற முயன்றபோது பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து மார்ச் 25 மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குஷ்டியாவிலிருந்து டாக்கா நோக்கி பயணித்த பேருந்து, படகில் ஏறிக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்துள்ளது. பேருந்தில் குறைந்தது 40 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட உடல்களில் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக தீயணைப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்ததாகவும், இன்னும் சிலர் காணாமல் போயிருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.
இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில், சுமார் 80 முதல் 90 அடி ஆழத்திலிருந்து பேருந்து மீட்கப்பட்டது. அதன் பின்னர் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டன.
சிலர் நீந்தி கரை சேர்ந்ததாகவும், பேருந்து சாரதி ஜன்னல் வழியாக தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக