கடந்த திங்கட்கிழமை தெஹ்ரானில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு பாரிய தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தீயினால் வெளியேறிய கரும்புகை தலைநகர் முழுவதையும் சூழும் நிலையில், அதனுடன் கலந்து பெய்த 'கறுப்பு மழை' மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மழையில் அமிலம் கலந்துள்ளதாகவும், காற்றில் விஷத்தன்மை கொண்ட ஹைட்ரோகார்பன்கள், சல்பர் ஆக்சைடுகள் மற்றும் நைட்ரஜன் சேர்மங்கள் அதிக அளவில் வெளியேறியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அசாதாரண சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார மையம், இந்த கறுப்பு மழையும் அதனுடன் வரும் அமிலமும் மனித ஆரோக்கியத்திற்கு, குறிப்பாகச் சுவாச மண்டலத்திற்கு மிக ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளது. ஈரான் அரசாங்கம் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள உலக சுகாதார மையம், காற்றுத் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எண்ணெய் ஆலைத் தீ விபத்துகளால் ஏற்பட்டுள்ள இந்த சுற்றுச்சூழல் மாசு, ஈரானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக