தென்னிலங்கையில் அதிர்ஷ்டலாபசீட்டு விற்பனை செய்து வரும் ஏழை தாயின் நேர்மை, இன்று நாடு முழுவதும் பேசப்படும் நெகிழ்ச்சியான சம்பவமாக மாறியுள்ளது. களுத்துறை, புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய கீதா காந்தி கோட்டகொட என்ற மூதாட்டியின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக லொத்தர் சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வரும் இவர், முன்னதாக ஒரு சிறிய தேநீர்க்கடை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வர்த்தக பாதிப்புகள் காரணமாக அந்த தொழிலை இழந்த அவர், வாழ்வாதாரத்திற்காக தற்போது வீதியோரத்தில் லொத்தர் சீட்டுகளை விற்பனை செய்து வருகிறார்.
நாளாந்தம் முகவர் நிலையத்திலிருந்து லொத்தர் சீட்டுகளை வாங்கி விற்பனை செய்து வரும் இவர், விற்பனை செய்யப்படாத சீட்டுகளை திருப்பி ஒப்படைக்க முடியாத நிலையில் இருப்பதால், அவற்றிற்கான நஷ்டத்தை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மோல்காவ பகுதியைச் சேர்ந்த லலித் பின்னகொட என்ற இளைஞர், இந்த வயதான பெண்ணுக்கு உதவும் நோக்கில் தினமும் விற்பனை செய்யப்படாமல் மிஞ்சும் லொத்தர் சீட்டுகளை விலை கொடுத்து வாங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று மாலை, எஞ்சியிருந்த 50 லொத்தர் சீட்டுகளையும் தானே வாங்குவதாக அவர் உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அன்று இரவு லொத்தர் குலுக்கல் முடிவுகள் வெளியான போது, அந்த 50 சீட்டுகளில் ஒரு சீட்டிற்கு இரண்டு இலட்சம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதை கீதா காந்தி கோட்டகொட அறிந்து கொண்டுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலை வழக்கம்போல் கடைக்கு வந்த லலித் பின்னகொடவிடம், அவருக்கு பரிசு விழுந்திருப்பதை அவர் நேர்மையாக தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட லொத்தர் சீட்டையும் எந்த தயக்கமும் இன்றி வழங்கியுள்ளார்.
மிகவும் ஏழ்மையான சூழலில் வாழ்ந்து வரும் நிலையில் கூட, நேர்மையை கைவிடாமல் நடந்துகொண்ட கீதா பாட்டியின் செயற்பாடு பலரது மனங்களை நெகிழ வைத்துள்ளது. இந்த நேர்மையை கண்டு நெகிழ்ந்த லலித் பின்னகொட, தனக்குக் கிடைத்த இரண்டு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையிலிருந்து 50,000 ரூபாயை அந்த இடத்திலேயே கீதா பாட்டிக்கு வழங்கிய சம்பவம் சமூகத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக