தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணெய் வகைகளை கலக்கி சந்தைக்குக் கொண்டுவரும் அபாயம் உள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே, இந்த வரி தளர்வு காரணமாக சந்தையில் எண்ணெய் கலப்படம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். இதன் விளைவாக, நுகர்வோர் அறியாமலே உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை பயன்படுத்தும் நிலை உருவாகலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார். தேங்காய் எண்ணெயின் விலை உயர்வுடன் பாம் எண்ணெய் மற்றும் ஏனைய குறைந்த தரமான எண்ணெய்கள் சந்தையில் அதிக அளவில் புழக்கத்திற்கு வரும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வைத்தியர்களின் கருத்துப்படி, அதிக சூட்டில் உணவுகளை பொரிப்பதற்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே பாதுகாப்பானது என்றும், பாம் எண்ணெய் மற்றும் பிற எண்ணெய் வகைகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவது இதய நோய்கள் உள்ளிட்ட பல சுகாதார அபாயங்களை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தென்னை சார்ந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், உள்ளூர் சந்தைக்குத் தேவையான தேங்காய்களை வெளிநாட்டு ஏற்றுமதிக்காக அதிகளவில் பயன்படுத்துவதால், நாட்டிற்குள் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் எனவும் அவர் கூறினார். இதன் விளைவாக, நுகர்வோர் பாம் எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் வகைகளை பயன்படுத்தத் தள்ளப்படுவார்கள் என்றும் ரஞ்சித் விதானகே சுட்டிக்காட்டினார்.
இதனால், நுகர்வோர் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் இந்த வரி தளர்வு தொடர்பான தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும், சந்தையில் எண்ணெய் கலப்படத்தை தடுக்கும் வகையில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக