இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக அவதானம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இணையத்தை அதிகமாக பயன்படுத்துவதன் ஊடாக ஒழுக்கக்கேடான சம்பவங்கள், இணையவழிக் குற்றங்கள் மற்றும் மனநல பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக் காலங்களில் சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்கள் தவறான தகவல்கள், வன்முறை உள்ளடக்கங்கள் மற்றும் அறிமுகமில்லாத நபர்களின் தொடர்புக்கு உட்படுவதாகவும், இதனால் பல்வேறு சமூக பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்துவதை முழுமையாகத் தடுத்தல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு பிரவேசத்தை வரையறுப்பது குறித்து அரசாங்க மட்டத்தில் ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே பல நாடுகள் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், அதனை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையிலும் உரிய சட்டச் சூழல் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்களைத் தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களின் மனநல வளர்ச்சிக்கும் ஒழுக்கமான சமூக சூழலை உருவாக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக