கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளில் பல்வேறு குறைபாடுகளும் முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளதாக அங்கு பணியாற்றும் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் நிர்மாணப் பணிகள் தொடர்பில் பொறியியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
2022 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 2025 ஜனவரி 3ஆம் திகதிக்குள் நிறைவடைய வேண்டியிருந்த போதிலும், இதுவரை பணிகள் நிறைவடையவில்லை என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதுவரை திட்டத்திற்கு மூன்று முறை காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த காலநீடிப்புகளுக்கு அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், திட்ட முகாமைத்துவப் பிரிவும் ஆலோசனைக் குழுவும் தனித்தனியாக செயற்பட வேண்டிய விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், சில பொறியியலாளர்கள் இரு பிரிவுகளுக்கும் சேவையாற்றும் நிலை காணப்படுவதால் நடுநிலைத்தன்மை தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேலைத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் பாரதூரமான சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து துறைமுக அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
சில கொடுப்பனவுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுதல், அறவிடப்பட வேண்டிய கட்டணங்கள் நீக்கப்படுதல் மற்றும் தொடர்ச்சியான நட்டம் ஏற்படுதல் போன்ற விடயங்கள் சந்தேகத்திற்குரியவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய மூன்றாவது கட்ட காலநீடிப்பு 2026 ஜூலை 7ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், நான்காவது கட்ட காலநீடிப்பு துறைமுக அதிகாரசபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது மேற்கொள்ளப்படும் சில கொடுப்பனவுகள் சட்டவிரோதமானவையாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தத் திட்டத்திற்குத் தேவையான மனிதவளம் 2019ஆம் ஆண்டின் முகாமைத்துவ சேவைகள் சுற்றுநிருபத்தின் அடிப்படையில் போட்டித்தன்மையான முறையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட போதிலும், அவர்களின் சம்பளத்தில் இதுவரை எந்தவொரு புதுப்பித்தலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக