இலங்கையில் அதிகரித்து வரும் சிறைச்சாலை நெரிசலுக்கு மாற்று வழிமுறையாக, பொருத்தமான வழக்குகளில் சந்தேக நபர்களை வீட்டுக்காவலில் தடுத்து வைக்கும் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்திற்கான சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தடுப்புக் காவலில் வைத்தல் அல்லது சிறைப்படுத்தல் போன்றவற்றுக்கு மாற்று வழிமுறையாக, பொருத்தமான வழக்குகளில் சந்தேக நபர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கான கொள்கை ரீதியான அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் சட்டவரைஞர் சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருந்தார். பின்னர், சட்டமூலத்தை மேலும் மீளாய்வு செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், சட்டமூலத்தில் சேர்க்கப்பட வேண்டிய புதிய ஏற்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றையும் இணைத்து சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சட்ட ஏற்பாடுகள் நடைமுறைக்கு வந்தால், பொருத்தமான வழக்குகளில் சிறையில் தடுத்து வைப்பதற்கு மாற்றாக வீட்டுக்காவல் முறையைப் பயன்படுத்துவதற்கான சட்டரீதியான வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக