பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சாகர காரியவசம், நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபர் அரசுக்கும் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன், அவர் பொதுமக்களிடம் தாக்குதலுக்கு உள்ளாகும் பொலிஸ்மா அதிபராக வரலாற்றில் இடம்பெற வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துகள் தொடர்பாக ஊடகங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, அரசாங்கம் இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் அதிகாரத்திற்காக கடந்த காலங்களில் மக்களை பலிகொடுத்த அரசியல் மனநிலையே இத்தகைய கருத்துகளில் பிரதிபலிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை திறம்பட மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஊழல், இலஞ்சம் மற்றும் அரச சொத்துக்களின் துஷ்பிரயோகம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளால் அச்சமடைந்தவர்களே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வரக்கூடும் என்ற சந்தேகத்தையும் வெளியிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என்றும், விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக