இலங்கையில் சிறுவர்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என்ற புதிய சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் உள்ளடக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி அமைச்சரவை வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து, சட்ட வரைவாளர் புதிய சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருந்தார்.
மேலும், ஆரம்பத்தில் ‘சிறுவர் உரிமைகள் தொடர்பான கூட்டிணைப்புச் சட்டம்’ என பெயரிடப்பட்டிருந்த சட்டமூலத்தை, தற்போது ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, கருத்தாக்கப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய விடயங்களையும் இணைத்து சட்டமூலத்தை விரைவாகத் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், இலங்கையில் சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சட்டரீதியான கட்டமைப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக