நாவலப்பிட்டி, பாலந்தொட்ட பகுதியில் பெய்த கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அரச பேருந்தொன்று சிக்கியுள்ளது.
வெள்ளநீர் அதிகரித்த நிலையில் பேருந்து சிக்கித் தவித்ததுடன், அதிலிருந்த பயணிகள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. பேருந்தைச் சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்திருந்த நிலையில், பயணிகள் ஜன்னல்கள் வழியாக வெளியேற்றப்பட்ட காட்சிகளும் காணொளியில் பதிவாகியுள்ளன.
நிலைமையை அவதானித்த நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு, லொறி ஒன்றின் உதவியுடன் பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை மேலும் மோசமடைந்து வரும் நிலையில், இளைஞர்களின் விரைவான நடவடிக்கையும் துணிச்சலான செயல்பாடும் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்க உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக பல பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அவதானமாகவும் பாதுகாப்பான முறையிலும் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக