இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் விதம் பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா தெரிவித்துள்ளார்.
கன்னி விக்னராஜா மற்றும் தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான உயர்மட்ட சந்திப்பு நேற்று (03) நிதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் UNDP வதிவிட பிரதிநிதி அஸூசா குபோட்டா மற்றும் பொருளாதார நிபுணர் கலாநிதி வகீஷா குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கன்னி விக்னராஜா, எதிர்காலத்திலும் இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நிதி ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட விடயங்களில் தற்போதைய அரசாங்கத்துடன் எந்தவிதமான விவாதமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டமும் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கைக்கு UNDP வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை வழிகாட்டலுக்கு அப்பாற்பட்டு தொடர்ச்சியான தொடர்பும் ஒத்துழைப்பும் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் எதிர்கால சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக