மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி உள்ளிட்ட 24½ பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் யுவதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில், வீட்டின் குடும்பத்தினர் அதே நாளில் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி பொலிஸார் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து திங்கட்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளின் போது, களவாடப்பட்டதாகக் கூறப்படும் தங்க நகைகள் மீட்கப்பட்டதுடன், அவை தொடர்பில் யுவதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட யுவதியும் கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த குறித்த யுவதி, சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக