நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் போதைப்பொருள் தொடர்பான சோதனை அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட நீண்டகால தாமதம் காரணமாக, 15,117 சந்தேக நபர்கள் விடுதலை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, நாட்டிலுள்ள 22 சிறைச்சாலைகளில் போதைப்பொருள் சோதனை அறிக்கைகள் உரிய காலத்தில் கிடைக்காததால், நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதமடைந்து ஆயிரக்கணக்கான சந்தேகநபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட சிறிய அளவிலான அபராதத் தொகையைக் கூட செலுத்த முடியாத காரணத்தால், நாட்டின் 28 சிறைச்சாலைகளில் 1,940 கைதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலுக்கு இந்த இரண்டு காரணிகளும் முக்கிய பங்காற்றுவதாக தேசிய தணிக்கை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை, போதைப்பொருள் பயன்பாடு, வைத்திருத்தல் மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கைதிகளை மற்ற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்துவதில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் உள்ள கைதிகள் மற்றும் பாதாள உலகச் செயல்பாட்டாளர்கள் ஒரே இடங்களில் தடுத்து வைக்கப்படுவதால், சிறைச்சாலைகளுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு வாய்ப்பு அதிகரித்து வருவதுடன், அதன் தாக்கம் சமூக பாதுகாப்பிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் எச்சரித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக