இலங்கையில் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கும், சாரதிகளால் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து விதிமீறல்களை துல்லியமாகக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமரா அமைப்பை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய கண்காணிப்பு நடைமுறையின் கீழ், வாகனம் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசியில் பேசுதல், குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடும் சாரதிகளை AI தொழில்நுட்ப கேமராக்கள் துல்லியமாக அடையாளம் கண்டு பதிவு செய்யும்.
வழக்கமான கண்காணிப்பு கேமராக்களிலிருந்து மாறுபட்டு, இந்த AI அமைப்பு மூலம் கண்டறியப்படும் வீதி விதிமீறல்கள் புகைப்பட ஆதாரங்களுடன் சேமிக்கப்படுவதால், விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் முதற்கட்டமாக கொழும்பு மாநகர எல்லைக்குள் உள்ள 9 முக்கிய சந்திப்புகள் மற்றும் பிரதான வீதிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் கொழும்பு நகரில் இடம்பெறும் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் வீதி விபத்துக்களை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனுடன், வாகனங்களின் வேகத்தை கண்காணிப்பதற்காக மேலும் 50 வேகமானி கருவிகளை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 45 வேகமானி கருவிகள் போக்குவரத்து பொலிஸாரின் பயன்பாட்டில் உள்ள நிலையில், புதிய 50 கருவிகள் இணைக்கப்படவுள்ளன.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள ஒவ்வொரு வேகமானி கருவியின் விலை சுமார் 33 இலட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக