முதல் குழந்தையைப் பெற்றெடுக்க இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில், கர்ப்பிணித் தாயும் அவரது வயிற்றில் இருந்த பிறக்காத குழந்தையும் உயிரிழந்த சம்பவம் வாத்துவ பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாத்துவையைச் சேர்ந்த 34 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 24ஆம் திகதி அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் காய்ச்சல் குறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். குழந்தையை அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவிப்பதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை இரத்தப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடவசதி இல்லாததால், உறவினர்கள் அவரை அரச மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவரது உடல்நிலை மிகவும் தீவிரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், கடந்த 28ஆம் திகதி வயிற்றில் இருந்த குழந்தையும், 29ஆம் திகதி மாலை தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் திறந்த முடிவு வழங்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பதற்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை இரத்தப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக